விராலிமலை மெய்க்கண்ணுடையாள் அம்மன் கோயில் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீ குண்டத்தில் இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை மெய்கண்ணுடையாள் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சித்திரை 8-ம் திருவிழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதலில் நூற்றுக்கணக்காண பக்தர்கள் தீ மிதித்து வேண்டுதலை நிறைவேற்றினர்.
ஆண்டுதோறும் இக்கோயிலில் நடைபெறும் சித்திரைத் திருவிழா நிகழாண்டு, கடந்த மே, 2-ம் தேதி காப்புகட்டுதலுடன் தொடங்கியது, தினமும் காலை, மாலை வேளைகளில் அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து காட்சியளித்தார். விழாவின் 8-ம் நாளான செவ்வாய்க்கிழமை, கோயில் முன்னாள் அமைக்கப்பட்டிருந்த பூ குழியில் (தீ குண்டம்) நூற்றுக்கணக்காண பக்தர்கள் தலையில் பால்குடம் சுமந்து வந்து தீ மிதித்து தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
தொடர்ந்து, பெண்கள் மாவிளக்கு, கரும்பு தொட்டி, அங்கப்பிரதட்சணம், பால்குடம் உள்ளிட்ட வழிபாடுகளை நடத்தினர். அதனைத் தொடர்ந்து 9- ம் விழாவான நாளை புதன்கிழமை(மே 10) ஆடு, கோழி பலியிடுதல் நிகழ்வும், மாலையில் இளைஞர்களின் படுகளம் விளையாட்டு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் நூற்றுக்கணக்கான காவல் துறையினர் விராலிமலை முழுவதும் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.