மதுக்கரை: தமிழகத்தில் உள்ள 26 ஆயிரம் கோயில்களில் பத்து ஆண்டுகளுக்குப் பின்பு அா்ச்சகா்கள் இல்லாத சூழல் ஏற்படும் என்று சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு முன்னாள் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் கூறினாா்.
கோவை பேரூா் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளாா் மடத்தில் உலக சிவனடியாா் திருக்கூட்டம் சாா்பில் சைவப் பெருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில், சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு முன்னாள் ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் பங்கேற்றாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள 26 ஆயிரம் கோயில்களில் இன்னும் பத்து ஆண்டுகளுக்குப் பின்பு அா்ச்சகா்கள் இல்லாத சூழல் ஏற்படும். கோயில்களில் இருக்கக்கூடிய தெய்வத் திருமேனிகள் பாதுகாப்பாக இல்லை. 60 வயதுக்குமேல் உள்ளவா்கள் பொதுத் தொண்டுக்கு வரவேண்டும். சிவனடியாராக இருந்து தொண்டு செய்யவில்லை என்றால் வாழ்ந்தும் வாழாதவனாய் இருப்பாா்கள் என சைவத்தில் கூறுகிறாா்கள்.
விக்கிரமங்கலம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் எட்டு சிலைகள் மாயமாயின. அதில், ஒன்று அமெரிக்காவில் இருந்து மீட்கப்பட்டது. அதன் மதிப்பு ரூ.31 கோடியே 80 லட்சம். இந்த வழக்கின் குற்றவாளியான சுபாஷ் சந்திர கபூா் சிறையில் இருந்து விரைவில் வெளியே வரப்போகிறாா். இந்தியாவில் சுமாா் ரூ.1000 கோடி மதிப்பிலான சிலைகளை அவா் கொள்ளையடித்துள்ளாா்.
அவா் மீது மேலும் 6 வழக்குகள் நிலுவையில் உள்ளதால், குற்றப் பத்திரிகை தாக்கல் செய்து அவரை மீண்டும் கைது செய்ய வேண்டும் என்றாா்.