நெல்லையில் பொருநை அருங்காட்சியகம்: அடிக்கல் நாட்டினார் முதல்வர்!

நெல்லையில் 33 கோடி ரூபாய் மதிப்பில் அமையவுள்ள பொருநை அருங்காட்சியக கட்டுமானப் பணிகளை  சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக்காட்சி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
நெல்லையில் பொருநை அருங்காட்சியகம்: அடிக்கல் நாட்டினார் முதல்வர்!

நெல்லையில் 33 கோடி ரூபாய் மதிப்பில் அமையவுள்ள பொருநை அருங்காட்சியக கட்டுமானப் பணிகளை  சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக்காட்சி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாட்டின் பண்டைய காலத்தில் சிறந்தோங்கி விளங்கிய ஆற்றங்கரை நாகரிகங்களில் ஒன்றான பொருநை ஆற்றங்கரையின் பெருமையை வெளிப்படுத்தும் விதமாக தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சார்பில் ஆதிச்சநல்லூர், சிவகளை, மற்றும் கொற்கை உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வின்போது  கிடைத்த அரிய தொல்பொருட்களை அழகுறக் காட்சிபடுத்தும் விதமாக ரூபாய் 33.02 கோடி மதிப்பீட்டில் நெல்லையில் நவீன வசதிகளோடு பொருநை அருங்காட்சியகம் அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இதனையடுத்து பாளையங்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட ரெட்டியார்பட்டி மலைப்பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டு 13.2 ஏக்கர் நிலப்பரப்பில் அருங்காட்சியகம் அமைகிறது. இதற்கான பணிகள் தொடக்கவிழா இன்று நடைபெற்றது.

பொருநை அருக்காட்சியக கட்டுமானப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டுவிழாவை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிகாட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

நெல்லையில் விழா மேடையில் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம், சட்டப்பேரவை உறுப்பினர் அப்துல்வகாப், மேயர் சரவணன், ஆட்சியர் கார்த்திகேயன் ஆகியோர் பங்கேற்றனர்.

இதனைத் தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 'பொருநை அருங்காட்சியகம் அமைக்கும் பணியை முதல்வர் தொடங்கி வைத்துள்ளார். இங்கு ஆதிச்சநல்லூர் காட்சிக் கூடம், சிவகளை காட்சிக் கூடம், கொற்கை காட்சிக் கூடம் என மூன்று வளாகங்கள் அமைகிறது. மேலும் சிற்றுண்டிச் சாலைகள், வாகன நிறுத்தம் ஆகியவைகளும் அமைக்கப்படுகிறது. கருணாநிதி நூலகமும் அமையும் வாய்ப்பு உள்ளது. இந்த அருங்காட்சியகம் அமைவதால் இப்பகுதி மக்களுக்கு மிக்பெரிய பொழுதுபோக்கு அம்சமாக இருக்கும். மனித நாகரிகத்தின் தொட்டில் என்ற பெருமை நெல்லைக்கு கிடைத்துள்ளது. சமஸ்கிருதத்தில் இருந்து தமிழ் பிரிந்தது என கூறினார்கள் அதனை பொருநை நாகரிகம் உடைத்துள்ளது. முதல் மனித நாகரிகம் சிந்து சமவெளி நாகரிகம் என்பதற்கு முதல்வர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். பொருநை நாகரிகம்தான் 3 ஆயிரத்து 200 ஆண்டுகளுக்கு முந்தைய நாகரிகம், பொருநை நாகரிகம் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது . இந்த அருங்காட்சியக பணிகள் 18 மாதங்களில் முடிவடையும் என தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் துணை மேயர் ராஜூ, மாவட்ட ஊராட்சி தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com