கள்ளச்சாராயத்துக்கு பலியானால்தான் நிதியா? மேம்பால சுவர் விழுந்து பலியானவரின் மகன் வேதனை

அரசின் கவனக்குறைவால் உயிரிழந்த எனது தந்தைக்கு நிதி வழங்க மறுப்பது ஏன்? என நெல்லையில் மேம்பால சுவர் இடிந்து விழுந்து பலியானவரின் மகன் வேதனை தெரிவித்துள்ளார்.
கள்ளச்சாராயத்துக்கு பலியானால்தான் நிதியா? மேம்பால சுவர் விழுந்து பலியானவரின் மகன் வேதனை

கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு 10 லட்சம் நிதி வழங்கும்போது அரசின் கவனக்குறைவால் உயிரிழந்த எனது தந்தைக்கு நிதி வழங்க மறுப்பது ஏன்? என நெல்லையில் மேம்பால சுவர் இடிந்து விழுந்து பலியானவரின் மகன் வேதனை தெரிவித்துள்ளார்.

ஆசியாவிலேயே முதல் ஈரடுக்கு மேம்பாலமான திருநெல்வேலி சந்திப்பு திருவள்ளுவர் பாலம் பாளையங்கோட்டை டவுண் பகுதியை இணைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் கடந்த மூன்றாம் தேதி கொக்கிரகுளம் பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் என்பவர் இருசக்கர வாகனத்தில் பாலத்தின் அருகே வந்து கொண்டிருந்தபோது ஈரடுக்கு பாலத்தின் பக்கவாட்டு சுவரில் இருந்த பெரிய அளவிலான கட்டுமானப் பகுதி இடிந்து அவர் மீது விழுந்தது. இதில் வேல்முருகன் படுகாயம் அடைந்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் அங்கு சிகிச்சை பலனளிக்காது என்று தெரிவித்ததாகவும் அதன் அடிப்படையில் வேல்முருகன்  உறவினர்கள் அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். பல லட்சம் செலவு செய்து தனியார் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்த வேல்முருகன்  ஒரு சில நாள்களுக்கு முன்பு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இதனை தொடர்ந்து அவரது மகன் மற்றும் உறவினர்கள் திருநெல்வேலி சந்திப்பு காவல் நிலையத்தில் இந்த விபத்து தொடர்பாக ஒப்பந்ததாரர் மற்றும் அதிகாரிகள் மீது அலட்சியத்தால் மரணத்தை உண்டாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே உடலை வாங்கப் போவதாகவும் தெரிவித்தனர். 

குறிப்பாக அண்மையில் தான் இந்த பாலம் சுமார் 2 கோடியே 83 லட்சம் ரூபாய் செலவில் பராமரிக்கப்பட்டது. எனவே முழுக்க முழுக்க அரசு மற்றும் ஒப்பந்ததாரரின் அலட்சியத்தில் தான் விபத்து நடைபெற்றுள்ளதாக உறவினர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

தொடர்ந்து இன்றும் உறவினர்கள் உடலை வாங்காமல் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுத்து உயிரிழந்த வேல்முருகனின் மகனுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயனிடம் மனு அளித்தனர்.

இதுகுறித்து வேல்முருகனின் மகன் கூறும்போது, அரசின் கவனக் குறைவால் தான் எனது தந்தை இறந்துள்ளார் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் நிதி கொடுக்கிறார்கள். ஆனால் இந்த விபத்து முழுக்க முழுக்க கவனக்குறைவால் நடந்திருக்கும்போது அரசு எங்கள் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கி வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com