சென்னை: அரசு தொடங்கியுள்ள நலவாழ்வு நடைப்பயிற்சி 8 கி.மீ. சுகாதார நடைபாதை திட்டத்தை அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சனிக்கிழமை(நவ.4) நடப்போம் நலம்பெறுவோம் என்ற திட்டத்தை காணொலி காட்சி வாயிலாக இளைஞர்கள் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
இதையடுத்து, தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்டங்களில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. இதில், அந்தந்த மாவட்டங்களில் அமைச்சர்கள், ஆட்சியர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.
இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைதளதில் பதிவிட்டிருப்பதாவது:
நீரிழிவு நோயும், இரத்த அழுத்தமும் இந்தியர்களைப் பெரிதும் அச்சுறுத்துகின்றது. இதற்கு ஆரம்பகட்ட தீர்வாக மருத்துவ உலகம் முன்வைப்பது முறையான நடைப்பயிற்சியும் உடற்பயிற்சியும் தான்.
எனவே, அனைத்து மாவாட்டங்களிலும் நமது அரசு தொடங்கியுள்ள நலவாழ்வு நடைப்பயிற்சி 8 கி.மீ. சுகாதார நடைபாதை (Health Walk) திட்டத்தை அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்! நடப்போம் நலம் பெறுவோம்! என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.