கம்பத்தில் 64-ஆவது ஆண்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம்!
கம்பம்: பகவதியம்மன் உற்சவ திருவிழாவை முன்னிட்டு, கம்பத்தில் 64 -ஆவது ஆண்டாக இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம் புதன்கிழமை நடைபெற்றது.
தேனி மாவட்டம், கம்பத்தில் பகவதியம்மன் உற்சவ திருவிழாவை முன்னிட்டு, காமுகுல ஒக்கலிகர் காப்பிலிய மகாஜன சங்கம் சார்பில் 64 -ஆவது ஆண்டாக இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம் கம்பம் கம்பமெட்டு சாலையில் நடைபெற்றது.
நாட்டாண்மை சுரேஷ் என்ற சுருளிச்சாமி தலைமை வகித்தார், என்.ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ., டி.டி.சிவக்குமார், ஏ.கே.சி.கருணாமூர்த்தி, எஸ்.சுப்புராயர் ஆகியோர் பந்தயத்தை தொடங்கி வைத்தனர்.
இதையும் படிக்க | திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா: 29 சிறப்பு அலுவலர்கள் நியமனம்
தேன்சிட்டு, பூஞ்சிட்டு, கரிச்சான், நடுமாடு, பெரியமாடு என மொத்தம் 70- க்கும் மேலான இரட்டை மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. வெற்றி பெற்ற மாடுகளுக்கும், ஓட்டிய சாரதிகளுக்கும் விழா மேடையிலேயே பரிசுகளை விழா குழுவினர் வழங்கினர்.
காவலருக்கு கால் துண்டிப்பு
பந்தயம் நடக்கும்போது வண்டிகளின் பின்னாலேயே மோட்டார் சைக்கிள்களில் பலர் சத்தமிட்டவாரே விரட்டி சென்றனர். அப்போது கம்பம்மெட்டு புறவழிச்சாலையில் செல்லும்போது 20-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டன. இதில், கம்பம்மெட்டு சோதனைச் சாவடியில் பணி முடித்து வீடு திரும்பிக்கொண்டிருந்த காவலர் மணிகண்டன் மோட்டார் சைக்கிள்கள் மீது மோதினர். இதில் அவரது வலது கால் படுகாயமடைந்து தொங்கியது, பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் காவலர் மணிகண்டனை கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.