தரங்கம்பாடி: மயிலாடுதுறை மாவட்டம் திருக்ககடையூர் அருகே நான்கு வழிச் சாலை பணிக்காக வைக்கப்பட்டுள்ள மணல் குவியலில் கார் மோதி செவ்வாய்க்கிழமை விபத்து ஏற்பட்டது.
தரங்கம்பாடி வட்டம் பகுதிகளில் திங்கள்கிழமை இரவு முதல் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் விழுப்புரம் முதல் நாகப்பட்டினம் வரையில் நான்கு வழிச் சாலை அமைக்கும் பணிக்காக திருக்கடையூர் அருகே வைக்கப்பட்டிருந்த மணல் குவியல்கள் மழையில் கரைந்து நெடுஞ்சாலையில் சரிந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் வரதராஜன் என்பவர் காரைக்காலில் இருந்து தனது காரில் உறவினர்களுடன் புதுச்சேரி நோக்கி சென்றுகொண்டிருக்கும்போது, திருக்கடையூர் அருகே நான்கு வழிச் சாலை பணிக்காக வைக்கப்பட்டியிருந்த மணல் குவியல்கள் மீது சொகுசு கார் மோதியது.
இதில் காரில் இருந்தவர்கள் அனைவரும் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இருப்பினும் காரின் முன் பகுதி முற்றிலுமாக சேதம் அடைந்தது.
இச்சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தரங்கம்பாடி தீயணைப்பு துறையினர் மணல் குவியலில் சிக்கி இருந்த காரை அரை மணி நேரத்திற்கு மேல் போராடி மீட்டனர். மேலும், சாலை முழுவதும் மணல் சூழ்ந்துள்ளதால் அப்பகுதியில் செல்லும் வாகனங்கள் சாலையில் சிக்கி செல்ல முடியவில்லை.
இதையும் படிக்க: சபரிமலை சீசன்: சென்னை - நெல்லை இடையே சிறப்பு வந்தே பாரத் ரயில்!
இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக சாலையில் உள்ள மணல்களை சீரமைக்க வேண்டும் மற்றும் மணல் குவியல்கள் சரிந்து விடாமல் பாதுகாக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.