மழை நீரில் மிதக்கும் வீடுகள்: கொடுந்தொற்று ஏற்படும் அபாயம்
அம்பாசமுத்திரம்: திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே அடையக்கருங்குளம் ஊராட்சியில் வடிகால் வசதியின்றி தேங்கிய மழை நீர் தேங்கியதால் செல்வதற்கு பாதையின்றி நோய்த்தொற்று ஏற்படும் அபாயத்தில் மக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் ஒன்றியம், அடையக்கருங்குளம் ஊராட்சிக்குள்பட்டது அகஸ்தியர்பட்டி, விநாயகர் காலணி 3-ஆவது தெரு. இதில் சுமார் 100 வீடுகளில் மக்கள் வசித்து வருகின்றனர். அந்தப் பகுதியில் வடிகால் வசதிகள் இல்லாததால் வீடுகளின் கழிவு நீர் மற்றும் மழை நீர் போன்றவை தெருக்களில் தேங்கும் நிலை உள்ளது.
இதையும் படிக்க | அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் கட்டணம் 50% உயர்வு: மாணவர்கள் அதிர்ச்சி
வடிகால் வசதியில்லாததால் மழைநீரும் கழிவு நீரும் சேர்ந்து தெருக்களில் தேங்கியுள்ளது.
இந்தநிலையில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால் அந்தப் பகுதியில் மழை நீர் தேங்கியது. மழைநீரும் கழிவு நீரும் சேர்ந்து முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கி உள்ளதால் நடக்க வழியில்லாத நிலை உள்ளதோடு கொசுக்கள் உருவாகி நோய்த்தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது.
ஆண்டுதோறும் மழைக்காலங்களில் இதுபோன்று தண்ணீர் தேங்கிவரும் நிலையில் ஊராட்சி சார்பில் மழை நீர் மற்றும் கழிவு நீர் வெளியேற்ற வடிகால் வசதி செய்து தரப்படவில்லை.
எனவே, போர்க்கால அடிப்படையில் தேங்கிய நீரை வெளியேற்றுவதோடு, வடிகால் வசதி செய்து தரவேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.