நாட்டில் உரிமைக்காக போராடும் நிலையே தற்போதும் உள்ளது என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் ரூ. 52 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமா் வி.பி.சிங் சிலையை முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று (நவ. 27) திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின்,
நாட்டில் உரிமைக்காக போராடும் நிலை தற்போதும் உள்ளது. கல்லூரி, நீதிமன்றம் உள்ளிட்ட பல்வேறு துறை நியமனங்களில் பிற்படுத்தப்பட்டவர்கள் போராட வேண்டிய நிலையே உள்ளது.
சாதி வாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும். பட்டியலின பழங்குடியின இடஒதுக்கீடுகளை முறைப்படுத்த வேண்டும்.
எங்கெல்லாம் புறக்கணிப்பு, தீண்டாமை இருக்கிறதோ அங்கெல்லாம் அதை முறிக்கும் மருந்துதான் சமூக நீதி.
சமூக நீதி காவலர் வி.பி. சிங் சிலை திறப்பு நாளில் நாம் ஏற்க வேண்டிய உறுதிமொழி, விளிம்புநிலை மக்களுக்கான உரிமைகளை, அரசியல் செயல் திட்டமாக மாற்ற உறுதியேற்போம்.
வி.பி. சிங் மறையலாம். அவர் ஏற்றி வைத்த சமூக நீதி தீபம் மறையாது. எந்த மாநிலம் மறந்தாலும் தமிழ்நாடு வி.பி. சிங்கை மறக்காது எனக் குறிப்பிட்டார்.