விமான நிலையம் அமையவுள்ள பரந்தூரில் ஐஐடி குழு ஆய்வு மேற்கொள்ள வருகைபுரிந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், அவர்களைத் தடுக்க முயன்ற காவல் துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிதாக விமான நிலையம் அமைக்கப்படும் என்ற அறிவிப்புக்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தொடர்ந்து ஓராண்டுக்கும் மேலாக 433வது நாளாக ஏகனாபுரம் உள்ளிட்ட சுற்றுப்புற கிராம மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஐஐடி அதிகாரிகள் அடங்கிய குழு பரந்தூர் விமான நிலையம் அமையவுள்ள பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் அவர்களை கட்டுப்படுத்த முயன்றனர். இதனால், பொதுமக்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சிலர் கைது செய்யப்பட்டு காவல் துறையால் அழைத்துச்செல்லப்பட்டனர்.