பென்னாகரம்: தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த மழை குறைந்துள்ளதால், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 3,000 கன அடியாக சரிந்துள்ளது.
கடந்த சில நாள்களாக தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, நாற்றாபாளையம், கேரட்டி, கெம்பாகரை, ராசி மணல், பிலிகுண்டுலு மற்றும் அதனை சுற்றியுள்ள வனப் பகுதிகளில் பெய்து வந்து மழையின் காரணமாக காவிரி ஆற்றின் இணைவு பெறும் தொட்டெல்லா ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடியாக நீடித்தது.
இந்த நிலையில் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த மழை முற்றிலும் குறைந்துள்ளது. மேலும் கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 2,489 கனஅடி உபரி நீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தானது வியாழக்கிழமை நிலவரப்படி வினாடிக்கு 3,000 கனஅடியாக சரிந்தது.
நீர்வரத்து குறைந்துள்ளதால் காவிரி ஆற்றில் ஆங்காங்கே பாறை திட்டுக்கள் வெளியே தெரிந்தும், ஒகேனக்கல்லில் உள்ள பிரதான அருவி, சினி அருவி, ஐவர் பானி உள்ளிட்ட அருவிகளின் நீர்வரத்து சரிந்து காணப்படுகிறது. மேலும் காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தின் அளவுகளை தமிழக, கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு பகுதியில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.