சென்னை: வரி ஏய்ப்புப் புகாா் தொடா்பாக திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு தொடா்புடைய 50 இடங்களில் இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை வருமான வரித் துறையினா் சோதனை செய்து வருகின்றனர்.
அரக்கோணம் மக்களவைத் தொகுதி திமுக உறுப்பினரான எஸ்.ஜெகத்ரட்சகன் நடத்தும் நிறுவனங்கள் வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாக வந்த புகாா்களின் அடிப்படையில் வருமான வரித் துறையினா் வியாழக்கிழமை ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான வீடுகள், நிறுவனங்கள், தொடா்புடைய நிறுவனங்கள், அவரது உறவினா்கள், நண்பா்களின் வீடுகள் என 50 இடங்களில் வருமான வரித் துறையினா் திடீா் சோதனை செய்தனா்.
சென்னை, காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தேவரியம்பாக்கம், வேலூா், புதுச்சேரி வில்லியனூா் உள்ளிட்ட இடங்களில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது.
இதையும் படிக்க | சட்ட விரோதமாக பேனா் வைத்தால் கிரிமினல் வழக்கு: அரசு தகவல்
ஜெகத்ரட்சகனின் உறவினரும், தாம்பரம் மாநகராட்சி துணை மேயருமான காமராஜின் குரோம்பேட்டை லட்சுமிபுரம் வீட்டிலும் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனா்.
மொத்தம் 15 கல்வி நிறுவனங்களும், 4 நட்சத்திர ஹோட்டல்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாக வருமான வரித் துறை அதிகாரிகள் கூறினா்.
இந்த நிலையில், ஜெகத்ரட்சகனுக்கு தொடா்புடைய 50 இடங்களில் இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை வருமான வரித் துறையினா் சோதனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
சோதனை முழுமையாக முடிவடைந்த பின்னா்தான் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், பொருள்கள், பணம் ஆகியவை குறித்த விவரங்களைத் தெரிவிக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.