செங்கல்பட்டு: வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் ரூ.20 கோடி மதிப்பில் புதிய ரயில் நிலையம் அமைக்க ஒப்பந்தம் கோரியுள்ளது தெற்கு ரயில்வே.
சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய புறநகா் பேருந்து நிலையம் கட்டும் பணி 2019 பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. சுமாா் 88 ஏக்கா் நிலத்தில் ரூ.400 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த புதிய பேருந்து நிலையத்தின் பணி 90 சதவிகிதம் நிறைவடைந்த நிலையில் விரைவில் திறக்கப்படவுள்ளது.
தென் மாநிலங்களுக்கு செல்லும் அனைத்துப் பேருந்துகளும் இந்த கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வண்டலூர் - கூடுவாஞ்சேரி புறநகர் ரயில் நிலையங்களுக்கு இடையே கிளாம்பாக்கம் அமைந்துள்ளதால், நகர்ப் பகுதிகளில் இருந்து கிளாம்பாக்கம் வருவோர் பெரும்பாலும் சாலை வழியாகத்தான் பயணிக்க வேண்டும். இதனால், ஜிஎஸ்டி சாலையில் மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் கிளாம்பாக்கத்தில் புறநகர் ரயில் நிலையம் கட்டப்பட வேண்டும் என கோரிக்கை வலுத்தது.
இதையும் படிக்க | ஆசிய விளையாட்டுப் போட்டியில் 100 பதக்கங்கள்: இந்தியா வரலாற்று சாதனை
அதன்படி, ரூ.20 கோடி செலவில் கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் இன்னும் 4 மாதங்களில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியானது.
மேலும், 3 நடைமேடை கொண்ட கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தின் கட்டுமானப் பணிகளை ஓராண்டுக்குள் முடிக்க ரயில்வே திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில், கிளாம்பாக்கத்தில் ரூ.20 கோடி மதிப்பில் புதிய ரயில் நிலையம் அமைக்க ஒப்பந்தம் கோரியுள்ளது தெற்கு ரயில்வே.
புறநகர் ரயில்கள் நின்று செல்லும் வகையில், 3 நடைமேடைகள் கொண்ட ரயில் நிலையமாக இது அமைய உள்ளது. ஓராண்டுக்குள் கட்டுமான பணிகளை முடிக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.
சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்கப்படும் புறநகர் ரயில்கள், கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.
புதிய ரயில் நிலையத்தால் ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.