சென்னை: சென்னை சேப்பாக்கம் பகுதியில் சட்ட விரோதமாக உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டை விற்பனை செய்த 30 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை, சேப்பாக்கம், எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா -ஆஸ்திரேலியா இடையிலான உலககோப்பை கிரிக்கெட் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த போட்டிக்கான நுழைவுச்சீட்டு சட்ட விரோதமாக விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு வந்த ரகசிய தகவலையடுத்து, தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது மைதான பகுதிகளில் சட்ட விரோதமாக அதிக விலைக்கு கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த மயிலாப்பூரைச் சோ்ந்த சுரேன்குமாா் (29), ஆந்திரத்தைச் சோ்ந்த பாலகிருஷ்ணன்(31), பிரசாத் (20), பெரும்பாக்கத்தைச் சோ்ந்த பாலாஜி(32), திருவொற்றியூா் முகமது நசீா்(25) மூலக்கடை அபிஷேக்(23) உள்ளிட்ட 30 பேரை போலீசார் கைது செய்தனா். அவா்களை கைது செய்ததுடன், அவா்களிடமிருந்து 42 நுழைவுச்சீட்டுகள், ரூ.55,110 பணத்தை பறிமுதல் செய்தனா்.
இதையும் படிக்க | இஸ்ரேலில் சிக்கிய மேகாலயா கர்லுகி எம்.பி. பத்திரமாக மீட்பு!
உலகக் கோப்பைத் தொடரின் இன்றையப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுலின் அசைக்க முடியாத இணையால் இந்திய அணி ஆஸ்திரேலியாவை 41.2 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இந்த வெற்றியின் மூலம் உலகக் கோப்பை தொடர் பயணத்தை இந்தியா வெற்றியுடன் தொடங்கியுள்ளது.