
ஈரோடு: கோபி அருகே தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளர் தந்தை, மாமனார் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளராக இருப்பவர் ராமேஸ்வர முருகன்(55). இவர் சென்னையில் வசித்து வருகிறார். இவரது சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த வெள்ளாங்கோவில். இங்கு அவருக்கு சொந்த வீடு உள்ளது. இந்த வீட்டில் அவரது தாய் மற்றும் தந்தை வசித்து வருகின்றனர். ராமேஸ்வர முருகன் அவ்வப்போது சொந்த ஊருக்கு வந்து வீட்டில் தங்கி செல்வது வழக்கம்.
இந்நிலையில் வியாழக்கிழமை காலை ஈரோடு லஞ்ச ஒழிப்புத்துறை காவல் ஆய்வாளர் ரேகா தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினர் வெள்ளாங்கோவில் உள்ள ராமேஸ்வர முருகன் தந்தை வீட்டிற்கு சோதனையிடுவதற்காக வந்தனர். வீட்டிற்குள் நுழைந்த அதிகாரிகள் வீட்டின் கதவை பூட்டினர். வீட்டில் ராமேஸ்வர முருகனின் தாய், தந்தை மட்டும் உள்ளனர். வீட்டிலிருந்து வெளியே யாரும் செல்ல அனுமதிக்கவில்லை. அதேபோல் வெளியே இருந்து யாரும் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. வீட்டில் உள்ள தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்பு போலீசார் வீட்டின் ஒவ்வொரு பகுதியையும் சோதனையிட்டு வருகின்றனர்.
இதேபோல் ராமேஸ்வர முருகனின் மாமனார் அறிவுடைநம்பி வீடு ஈரோடு அக்ரஹார வீதியில் உள்ளது. இவர் அதே பகுதியில் சொந்தமாக நகைக்கடை வைத்துள்ளார். இவரது வீட்டிற்கும் வியாழக்கிழமை காலை வந்த லஞ்ச ஒழிப்புத்துறை, அவரது வீட்டிலும் சோதனையிட்டு வருகின்றனர்.
ராமேஸ்வர முருகன் பள்ளி கல்வித் துறை இணை இயக்குநராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.