கம்பம்: புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை மற்றும் மகாளய அமாவாசையை முன்னிட்டு, தேனி மாவட்டம், கம்பம் அருகேயுள்ள சுருளி அருவியில் முன்னோர்கள் நினைத்து வழிபாடுகள் நடத்த ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர்.
முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்ய உகந்த நாள் அமாவாசை நாளாகும், இதில் புரட்டாசி மாதம் வரும் அமாவாசை மகாளய அமாவாசை தினத்துக்கு தனி சிறப்பு உண்டு.
சனிக்கிழமை மஹாளய அமாவாசை தினம் வந்ததால் சுருளி அருவியில் காலை முதலே ஆயிரக்கணக்கான ஆண் பெண் மற்றும் மக்கள் வழிபாடு செய்ய திரண்டனர். முன்னதாக சுருளி அருவியில் சென்று நீராடி சுருளியாற்றங்கரைக்கு வந்தனர்.
அங்கு முன்னோர்களை நினைத்து வழிபாடு நடத்தி அன்னதானம், வஸ்த்தர தானம் உள்ளிட்ட தானங்களை செய்தனர்.
மஹாளய அமாவாசை தினத்தை முன்னிட்டு சுருளி அருவியில் ஸ்ரீ வில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தினர் நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படவில்லை, சுருளிப்பட்டி ஊராட்சியினரும் வாகன கட்டணம் வசூலிக்கவில்லை. சுருளிப்பட்டி ஊராட்சி நிா்வாகம் சாா்பில் குடிநீர் உள்ளிட்ட சுகாதார வசதிகளை செய்திருந்தனர்.
அரசு போக்குவரத்து கழகம் கம்பம் பணிமனை சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. ராயப்பன்பட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுட்டனா். கே.கே.பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.