2024 மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி ஆட்சியைப் பிடித்தால், காங்கிரஸ் தரப்பில் மல்லிகார்ஜுன கார்கே அல்லது ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த வாய்ப்புள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் தெரிவித்துள்ளார்.
2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவை எதிர்கொள்ள 'இந்தியா கூட்டணி' என்ற பெயரில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்ற கேள்வி இருந்து வருகிறது. எனினும் தேர்தலுக்குப் பின்னர் பிரதமர் வேட்பாளர் குறித்து முடிவு செய்யப்படும் என அக்கட்சியின் தலைவர்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் காங்கிரஸ் செயற்குழு உறுப்பினரும் எம்.பி.யுமான சசி தரூர், நேற்று(திங்கள்கிழமை) திருவனந்தபுரத்தில் உள்ள டெக்னோபார்க்கில் 'வே டாட் காம்' அலுவலகத்தைத் திறந்துவைத்து பின்னர் தொழில்நுட்ப நிபுணர்களுடன் உரையாடினார்.
இதையும் படிக்க | தமிழகத்தில் 11 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்
அப்போது பேசிய அவர், 'அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி இருப்பதால் வியக்கத்தக்க முடிவுகள் வரும். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை வீழ்த்தி, இந்தியா கூட்டணி ஆட்சியைப் பிடிக்க வாய்ப்புகள் உள்ளன. அதனை நாம் பொறுத்திருந்து பார்ப்போம்.
இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் காங்கிரஸ் தரப்பில் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே அல்லது கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை பிரதமராக முன்னிறுத்த வாய்ப்புள்ளது.
எனினும் இது கூட்டணி என்பதால் முடிவுகள் வந்தபின்னர் அனைத்துக் கட்சிகளும் இணைந்து பிரதமரை தேர்வு செய்யும். காங்கிரஸ் தரப்பில் என்னுடைய யூகம் ராகுல் காந்தி அல்லது கார்கேதான். கார்கே பிரதமரானால் இந்தியாவின் முதல் தலித் பிரதமராக இருப்பார்' என்று தெரிவித்தார்.