மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி பீட நிறுவனர் பங்காரு அடிகளாருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு தொடங்கியது.
அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்ட பிறகு, சக்தி பீடத்திலுள்ள தியான மண்டபத்திற்கு அவரின் உடல் எடுத்துச்செல்லப்படுகிறது. அங்கு இறுதிச் சடங்குகள் செய்யப்படவுள்ளன.
அவரின் அருள்வாக்குப்படி கோயில் கருவறைக்கும் புற்று மண்டபத்துக்கும் நடுவில் அமர்ந்த நிலையில் அவரின் உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. அவரின் பணி முதல்முறை எங்கு தொடங்கியதோ அங்கு நல்லடக்கம் செய்ய வேண்டும் என பங்காரு அடிகளார் முன்பே கூறியதாக அவரின் பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.
பங்காரு அடிகளாரின் இறுதிச் சடங்கில் தமிழக அரசு சார்பில் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, தொழிலாளர் நலத் துறை அமைச்சர் அன்பரசன், ஜெகத்ரட்சகன் எம்.பி., ஆளுநர் ஆர். என். ரவி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். மூண்று முறை வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு அரசு மரியாதை செலுத்தப்பட்டது.
மேல்மருவத்தூர் சக்தி பீடத்தில் பல்லாயிரக்கணக்கானோர் குவிந்துள்ளதால், பாதுகாப்புக்கு காவல் துறையினர் அதிக எண்ணிக்கையில் குவிக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக, தமிழக அரசு சார்பில் பங்கேற்றுள்ள அமைச்சர் பொன்முடி, பங்காரு அடிகளார் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.