
அரபிக் கடலில் இன்று காலை உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, இந்த புயல் சின்னம் உருவானால் மும்பையை தாக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டிருந்த நிலையில், இது ஓமன் நோக்கி நகரம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதாவது, நேற்று காலை தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, நேற்று நள்ளிரவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தென்மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் நிலவியது.
இது இன்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அதே பகுதியில் நிலவுகிறது.
இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறக்கூடும்.
இது மேலும் வலுவடைந்து 22ஆம் தேதி மாலை தீவிரப் புயலாக நிலவக்கூடும். இது வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து 24ஆம் தேதி தெற்கு ஓமன் மற்றும் அதனை ஒட்டிய ஏமன் கடலோரப் பகுதிகளுக்கு நகரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புயல் சின்னம் காரணமாக, மும்பைக்கு நேற்று புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், மும்பை புயல் எச்சரிக்கையில் இருந்து விடுபட்டிருப்பதாக இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் சின்னம் உருவானால், இந்தியா வழங்கிய தேஜ் என்ற பெயர் இதற்கு சூட்டப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொதுவாகவே அரபிக்கடலில் உருவாகும் புயல்களின் பாதைகள் மற்றும் தீவிரத்தை கணிக்க முடியாது என்பதே வரலாறாக உள்ளதாகவும், அரபிக் கடலில் உருவாகும் புயல்கள் சோமாலியா, ஏமன், ஓமன் பகுதிகளை நோக்கிச் செல்லும் என்பதும் ஏற்கனவே கணிக்கப்பட்ட தகவல்கள்.
சில வேலைகளில் இது குஜராத், பாகிஸ்தான் நோக்கியும் நகரக்கூடும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.