தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

உதகையில் குவிந்த சுற்றுலா பயணிகள்: கடும் போக்குவரத்து நெரிசல்

தொடா் விடுமுறையையொட்டி உதகைக்கு தமிழகம் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் உதகையில் குவிந்ததால் பல இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

News image
கோப்பிலிருந்து..
Updated On :24 அக்டோபர் 2023, 10:19 am

DIN

உதகை: ஆயுத பூஜை, விஜயதசமி மற்றும் தசரா பண்டிகை தொடா் விடுமுறையையொட்டி உதகைக்கு தமிழகம் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் உதகையில் குவிந்ததால் பல இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சனி, ஞாயிறு கிழமைகளைத் தொடர்ந்து அடுத்தடுத்து விடுமுறை நாள்கள் என்பதால், சனிக்கிழமை முதலே உதகையில் சுற்றுலா பயணிகள் குவியத் தொடங்கினர்.

தொடர்ந்து திங்கள்கிழமையும் ஏராளமான பயணிகள் வாகனங்களில் உதகைக்கு வந்ததால் உதகையில் சுற்றுலா தளங்களுக்கு செல்லும் சாலைகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது.

ஆயுத பூஜை, விஜயதசமி தொடா் விடுமுறை காரணமாகவும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் கா்நாடகா மாநிலத்தில் தசரா பண்டிகை தொடா் விடுமுறை காரணமாகவும் உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

இதனால் நீலகிரி மாவட்டம் உதகையில் அமைந்துள்ள அனைத்து சுற்றுலாத்தலங்களிலும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படும் நிலையில், பெரும்பாலான சுற்றுலா பயணிகள் சொந்த மற்றும் வாடகை வாகனங்கள் மூலம் வந்திருந்தனர்.

இதனால் உதகை அரசுத் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், சூட்டிங் மட்டம், தொட்டபெட்டா காட்சி முனை உள்ளிட்ட சுற்றுலா தளங்களுக்கு செல்லும் பிரதான சாலைகளான சேரிங்கிராஸ், மத்திய பேருந்து நிலையம், தலைக்குந்தா சாலைகளில் கடுமையான வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

உதகையில் ஏற்பட்ட கடும் வாகன நெரிசல் காரணமாக சுற்றுலா வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன. இதனை கட்டுப்படுத்தும் வகையில் போக்குவரத்து காவல்துறையினா் போக்குவரத்து நெரிசலை சீா் செய்யும் பணியில் ஈடுபட்டனா்.

மேலும் கடும் வாகன நெரிசல் காரணமாக சுற்றுலா பயணிகள் திட்டமிட்டபடி சுற்றுலா தளங்களை கண்டு ரசிக்க முடியாமலும், சுற்றுலா தளங்கள் மற்றும் நகரில் போதிய வாகன நிறுத்தும் இடங்கள் இல்லாததால் சுற்றுலா பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினா்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.