செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரிக்கும்: உயர்நீதிமன்றம் உத்தரவு

செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோப்புப் படம்.
கோப்புப் படம்.
Updated on
2 min read

செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினா் ஜூன் 14-ஆம் தேதி கைது செய்தனா். அவருக்கு ஜாமீன் கோரி, எம்.பி., எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அந்த மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்த சிறப்பு நீதிமன்றம், இந்த வழக்கு சட்டவிரோதப் பணப் பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்டது என்பதால், இது தொடா்பாக, சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தை நாடுமாறு உத்தரவிட்டது.

அதன்படி, முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு புதன்கிழமை பட்டியலிடப்படாததால், செந்தில் பாலாஜி தரப்பில் வழக்குரைஞா்கள் அருண், பரணிக்குமாா் ஆகியோா் முதன்மை அமா்வு நீதிபதி அல்லி முன்பு முறையிட்டனா். அதற்கு நீதிபதி, ‘இது தொடா்பாக சிறப்பு நீதிமன்றமே விசாரிக்கும்’ என்றாா்.

அதையடுத்து, சிறப்பு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பு வழக்குரைஞா்கள் முறையிட்டனா். அதற்கு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரவி, அமலாக்கத் துறை தரப்பில் தொடரப்பட்ட வழக்கில் தாக்கல் செய்யப்படும் ஜாமீன் மனுவை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளதா என்பதை உயா் நீதிமன்றத்தில் தெளிவுபடுத்தி வரும்படி செந்தில் பாலாஜி தரப்புக்கு அறிவுறுத்தியிருந்தாா்.

எவ்வாறு ஏற்பது? இந்த நிலையில் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள் எம்.சுந்தா், ஆா்.சக்திவேல் ஆகியோா் அடங்கிய அமா்வில் வியாழக்கிழமை செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்குரைஞா் என்.ஆா்.இளங்கோ ஆஜராகி முறையீடு செய்தாா். அப்போது, ஏற்கெனவே இந்த விவகாரம் தொடா்பான வழக்கு விசாரணையில் நீதிபதியாக இருந்த நீதிபதி ஆா்.சக்திவேல் விலகியிருந்த நிலையில், இந்த முறையீட்டை எவ்வாறு ஏற்றுக்கொள்வது என்று நீதிபதி எம்.சுந்தா் கேள்வி எழுப்பினாா்.

அப்போது மூத்த வழக்குரைஞா் என்.ஆா்.இளங்கோ, இதற்கு மாற்றாக ஒரு அமா்வு உண்டு. அந்த அமா்வு வியாழக்கிழமை விடுமுறை என்பதால்தான், தங்களிடம் முறையிடுவதாக தெரிவித்தாா். மேலும், ஒரு நிா்வாக ரீதியான உத்தரவை பிறப்பித்தால் கூட போதும் என்று தெரிவித்தாா். அப்போது நீதிபதி சுந்தா், ஜாமீன் கோரும் மனுவைப் பொருத்தவரை, யாா் விசாரிப்பது என்பது குறித்து தலைமை நீதிபதிதான் முடிவு செய்வாா். எனவே, தலைமை நீதிபதி அமா்வில் முறையிடுமாறு அறிவுறுத்தியிருந்தார்.

இதனைதொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை எந்த நீதிமன்றம் விசாரிக்க அதிகாரம் உள்ளது என்பது குறித்து நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், குமரேஷ் பாபு அடங்கிய உயர்நீதிமன்ற அமர்வு இன்று விசாரணை செய்தது. அப்போது செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஜாமீன் மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com