விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த அழகன் குப்பத்தில் மீன்பிடித் துறைமுகம் அமைக்கும் பணியை உடனடியாகத் தொடங்க வேண்டும், தவறும்பட்சத்தில் அதிமுக சார்பில் வழக்குத் தொடரப்படும் என்றார் அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி. சண்முகம்.
மரக்காணம் அருகே அழகன்குப்பம் கிராமத்தில் ரூ.235 கோடி மதிப்பீட்டில் மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்படும் என அதிமுக ஆட்சிக்காலக்தில் அறிவிக்கப் பட்டது. தற்போது இந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
மரக்காணத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் நிர்வாகிகள் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.
இந்தநிலையில், திமுக அரசின் நடவடிக்கைகளைக் கண்டித்தும். அழகன் கும்பத்தில் மீன்பிடித் துறைமுகம் அமைக்கும் பணிகளை உடனடியாக நிறைவேறை வலியுறுத்தியும் விழுப்புரம் மாவட்ட அதிமுக சார்பில் மரக்காணத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சி.வி. சண்முகம் பேசியது: அதிமுக அரசால் தொடங்கப்பட்ட அனைத்துத் திட்டங்களையும் திமுக ரத்து செய்து வருவது கண்டனத்துக்குரியது.
மரக்காணம் அழகன்குப்பத்தில் மீன்பிடித் துறைமுகம் அமைக்கும் பணிகளை தமிழக அரசு உடனே தொடங்க வேண்டும், தவறும் பட்சத்தில் அதிமுக சார்பில் வழக்குத் தொடரப்படும். பாதிப்புக்குள்ளாகும் மீனவர்களின் நலனின் தமிழக அரசு பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்றார் சி.வி. சண்முகம்.
இந்த ஆர்ப்பாட் டத்தில் கட்சியின் நிர்வாகிகள் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.