சென்னை: சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையேயான பறக்கும் ரயில் நிலையங்களை கைப்பற்றி மெட்ரோ தரத்துக்கு மேம்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி இடையே மேம்பாலத்தில் இயங்கக்கூடிய பறக்கும் ரயில் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த வழித்தடத்தில் சேப்பாக்கம், மந்தைவெளி, கிரீன்வேஸ் சாலை, கோட்டூர்புரம், திருவான்மியூர், தரமணி, பெருங்குடி உள்ளிட்ட முக்கிய பறக்கும் ரயில் நிலையங்கள் அமைந்துள்ளன.
சென்னை சாலைகளில் உள்ள போக்குவரத்து நெரிசலை தவிர்க்க லட்சக் கணக்கானோர் நாள்தோறும் இந்த ரயில் சேவையை அலுவலகம், கல்லூரிகளுக்கு சிரமமின்றி சென்றுவர பயன்படுத்துகின்றனர்.
இந்த நிலையில், பறக்கும் ரயில் நிலையங்களில் போதிய கழிவறை வசதிகள், கடைகள் இல்லையென்றும், சில இடங்கள் சுகாதாரமின்றி இருப்பதாகவும் நீண்ட நாள்களாக பயணிகள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, பறக்கும் ரயில் நிலையங்களை கையகப்படுத்தி மெட்ரோ ரயில் நிலையங்களை போன்று வணிக வளாகங்கள், உணவகங்கள், வாகன நிறுத்துமிடம் உள்ளிட்டவை மேம்படுத்த சென்னை பெருநகர ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் முடிவெடுத்துள்ளது.
இதற்காக வணிக திட்ட அறிக்கை தயார் செய்வதற்கான நிறுவனத்தை தேர்வு செய்வதற்கான டெண்டரை சென்னை பெருநகர ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் வெளியிட்டுள்ளது.