ஜெயிலர் பார்க்க 9 பேர் மட்டுமே! படம் திரையிடாததால் ஏமாற்றம்!
சேலம் திரையரங்கில் ஜெயிலர் படத்தை காண 9 பேர் மட்டுமே வந்த நிலையில், அவர்களுக்கு படம் திரையிடாததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். நீதிமன்றத்தில் வழக்கு தொடர் போவதாக அறிவித்ததால் பரபரப்பு நிலவிய்து.
சேலம் சூரமங்கலம் தீயணைப்பு நிலையத்தில் சித்ராஜ் என்பவர் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி திலகம். இவர்களுடைய மகள் அஸ்வினி தனது பெற்றோரின் 25வது திருமண நாளை முன்னிட்டு ரஜினி நடித்த ஜெயிலர் திரைப்படத்தை குடும்பத்தோடு பார்க்க புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஏ.ஆர்.ஆர்.எஸ் மல்டிபிளக்ஸ் திரையரங்கில் ஆன்லைன் மூலம் இருக்கைகள் பதிவு செய்துள்ளார்.
அதன்படி திரையரங்குக்கு குடும்பத்தோடு வந்துள்ளனர். அப்போது திரையரங்கினுள் அமர வைக்கப்பட்டு வெகு நேரமாகியும் திரைப்படம் ஒளிப்பரப்பவில்லை. பின்னர் திரையரங்கு நிர்வாகம் ஜெயிலர் திரைப்படம் பார்க்க 9 பேர் மட்டுமே வந்துள்ளதால் படத்தை திரையிட முடியாது எனக்கூறி அனைவரையும் திரையரங்கை விட்டு வெளியேறுமாறு கூறியுள்ளனர்.
இதனால் பெரும் ஆர்வத்தோடு வந்த அஸ்வினி குடும்பத்தினர் மற்றும் இதர ரஜினி ரசிகர்கள் திரையரங்கு நிர்வாகத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து 1 வார காலத்தில் இருக்கைகள் பதிவு செய்ய ஆன்லைன் மூலம் செலுத்திய தொகை மீண்டும் தங்களது வங்கிக் கணக்கில் வந்து சேர்ந்து விடும் எனக் கூறி திரையரங்கு நிர்வாகத்தினர் அனைவரையும் வெளியேற்றி உள்ளனர்.
இதனால் திரையரங்கு நிர்வாகத்திற்கும் படம் பார்க்க வந்திருக்கும் கடுமையாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் முன்பதிவு செய்த பெண் ஆவேசமடைந்து தங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். இல்லையேல் நீதிமன்றம் மூலம் தீர்வு காண்போம் என ஆவேசமாக அறிவித்ததால் பரபரப்பு நிலவியது.
இருப்பினும் திரையரங்கு நிர்வாகத்தினால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு உடனடி தீர்வு கிடைக்காததால் அஸ்வினி குடும்பத்தினர் புலம்பியபடி அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.