கோவை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆசியாவிலேயே 2 ஆவது உயரமான கோவை புலியகுளம் பகுதியில் உள்ள முந்தி விநாயகர் கோயில் விநாயகர் சிலை நான்கு டன் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் இன்று பல்வேறு இடங்களில் விநாயகர் சதுர்த்தி விழா உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. சில இடங்களில் நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. இதன் ஒரு பகுதியாக கோவை புலியகுளம் பகுதியில் உள்ள முந்தி விநாயகர் கோயிலில் திங்கள்கிழமை விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு அதிகாலை முதலே பல்வேறு அலங்காரங்களால் பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது.
திங்கள்கிழமை சந்தனகாப்பு அலங்காரம் செய்யபட்டு 4 டன் மலர்களால் சிலை அலங்கரிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | இரு சக்கர வாகனத்தில் சாகசம்: டிடிஎஃப் வாசன் மீது வழக்குப் பதிவு!
புலியகுளம் விநாயகர் சிலை ஆசியாவிலேயே இரண்டாவது மிக உயரமான சிலையாகும். இதன் உயரம் 19 அடி, அகலம் 10 அடி, எடை 190 டன் என்பது குறிப்பிடத்தக்கது.
திங்கள்கிழமை காலை முதல் ஏராளமான பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். மேலும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவையில் 1,500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர்.
இதேபோல் ஈச்சனாரி விநாயகர் கோயிலிலும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.