திருவாரூர்: டெல்டா பகுதியில் கருகி வரும் பயிர்களைக் காக்கும் வகையில் கர்நாடக அரசிடமிருந்து காவிரி நீரை பெற்று தரக் கோரி திருவாரூரில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் ரயில் மறியல் போராட்டம் தொடங்கியது.
தமிழ்நாட்டில் கருகும் 3.50 லட்சம் ஏக்கர் குறுவைப் பயிரை காக்கும் வகையிலும், 15 லட்சம் ஏக்கர் சம்பா சாகுபடியை தொடங்கும் வகையிலும் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டபடி கர்நாடகாவிடமிருந்து தண்ணீரை பெற்றுத் தர வேண்டும். மேக்கேதாட்டு அணைக்கட்ட அனுமதிக்கக் கூடாது. தமிழ்நாட்டில் ராசிமணல் அணைக்கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி மேலாண்மை ஆணையத்தின் தன்னாட்சி அதிகாரத்துடனான செயல்பாட்டை முடக்கக்கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்டா பகுதியில் ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் அறிவித்திருந்தார்.
அதன்படி திருவாரூர் ரயில் நிலையத்தில் மன்னார்குடி மயிலாடுதுறை பயணிகள் ரயிலை மறித்து போராட்டம் நடத்தப்பட்டது. ரயிலை மறித்து போராட்டக் குழுவினர், கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
போராட்டம் நடைபெற்ற இடத்துக்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.பி.சுரேஷ்குமார் தலைமையிலான காவல் துறையினர் போராட்டக்குழுவினருடன் பேச்சு வார்த்தை நடத்தியதையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது.
இதையும் படிக்க: தங்கம் விலை உயர்வு: இன்றைய நிலவரம்!
தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.