40 அணைகளுக்கு மேல் கட்டியவர் கருணாநிதி என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு திமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் பதிலளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழகத்தை 9 ஆண்டுகள் ஆட்சி செய்த காமராஜர் விவசாயத்தை பாதுகாக்க 12 அணைகளை கட்டினார். ஆனால், ஆறாவது முறையாக ஆட்சி செய்யும் திமுக 5 அணைகளை மட்டுமே கட்டியுள்ளது என்று ஒரு தவறான குற்றச்சாட்டை அண்ணாமலை திமுக மீது சுமத்தி இருக்கிறார்.
நித்தம் நித்தம் இப்படிப்பட்ட உண்மைக்கு மாறான செய்திகளை பேசி வம்பில் மாட்டிக் கொள்வதை நண்பர் அண்ணாமலை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார். அதில் ஒன்று தான் இந்த தவறான குற்றச்சாட்டு.
பெருந்தலைவர் காமராஜர், கிருஷ்ணகிரி அணை, சாத்தனூர் அணி, வைகை அணை, மணிமுத்தாறு அணை போன்ற அணைகளை கட்டினார் என்பதில் மாறுபட்ட கருத்தில்லை.
ஆனால் திமுக ஆட்சியில் 5 அணைகளை மட்டுமே கட்டினார்கள் என்று அண்ணாமலை சொல்வது ஜமக்காலத்தில் வடிகட்டிய பொய்.
நம்பியாறு அணை, பொய்கையாறு அணை, கொடுமுடியாறு அணை, கடானா அணை, இராமநதி அணை, பாலாறு, பொருந்தலாறு அணை இப்படி 40க்கும் மேற்பட்ட அணைகளை கட்டியது கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சி.
"ஆளுங்கட்சியின் மீது எதிர்க்கட்சி குற்றம் குறைகளை சொல்வது தவறில்லை; ஆனால், அவ்வாறு சொல்வதற்கு முன், சொல்கிற குற்றச்சாட்டு உண்மையா? என்பதை ஒரு முறை பரிசீலனை செய்து பார்த்துக் கொள்ள வேண்டும்; என்னுடைய நீண்டகால அனுபவத்தில் நண்பர் அண்ணாமலைக்கு சொல்கிற ஒரு யோசனையாகும்; இல்லாவிட்டால், அவர் கூறும் குற்றச்சாட்டு யாவும் புஸ்வானமாகிவிடும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.