சென்னை மெரினா கடற்கரையில் விநாயகர் சிலை கரைக்கப்பட்ட நிகழ்வை தொடர்ந்து, கரையோரங்களில் தேங்கிய 70 டன் கழிவுகளை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றியுள்ளனர்.
தமிழகம் முழுவதும் செப்.18-ஆம் தேதி முதல் விநாயகா் சதுா்த்தி விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் வீடுகள், அலுவலகம், பொது இடங்கள் என பல்லாயிரக்கணக்கான விநாயகா் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டன.
இதில், சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் 1,519 சிலைகள், தாம்பரத்தில் 425 சிலைகள், ஆவடியில் 204 சிலைகள் என மொத்தம் 2,148 சிலைகள் காவல் துறையின் அனுமதியுடன் பொது இடங்களில் கடந்த ஒரு வாரமாக வைக்கப்பட்டன.
செப். 23, 24 ஆகிய தேதிகள் விநாயகா் சிலைகளை ஊா்வலமாக எடுத்துச் சென்று சென்னையில் பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், நீலாங்கரை, காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூா் ஆகிய 4 கடற்கரைகளில் விசா்ஜனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது.
அதன்படி, 2-ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை மட்டும் சென்னையில் 1,948 விநாயகா் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டது.
இந்த நிகழ்வின்போது விநாயகர் சிலைக்கு அணிவிக்கப்பட்டிருந்த மாலை, பூ, வாகனங்களில் கொண்டுவரப்பட்ட மரக்கட்டைகள் உள்பட இதர கழிவுகள் கடற்கரைகளில் போடப்பட்டது.
இந்த கழிவுகள் கடலுக்குள் கலந்து சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதற்குள் இரவோடு இரவாக மாநகராட்சி ஊழியர்கள் சுமார் 70 டன் கழிவுகளை மெரினா கடற்கரையில் இருந்து மட்டும் அகற்றியுள்ளனர். இதனால், பெருமளவு கடல் மாசு தடுக்கப்பட்டுள்ளது.
மேலும், கடலில் கரையால் கரை ஒதுங்கிய விநாயகர் சிலைகளை கரைக்கும் பணிகளிலும் சென்னை மாநகராட்சி நிர்வாகத்தினர் ஈடுபட்டுள்ளனர். இந்த பணிகளை சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் திங்கள்கிழமை நேரில் ஆய்வு செய்தார்.