பாஜக தலைவர் அண்ணாமலையுடன் எந்த பிரச்னையும் இல்லை என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.
தில்லிக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்டுள்ள எடப்பாடி பழனிசாமி, நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக தலைவர் ஜெ.பி.நட்டாவுடன் சந்தித்து பேசினார்.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்து இபிஎஸ் பேசியதாவது:
பாஜக தலைவர் அண்ணாமலையுடன் எந்த பிரச்னையும் இல்லை. தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக வெளியான ஆடியோ குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று உள்துறை அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளோம்.
கொடநாடு வழக்கில் நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை சிறையில் அடைத்தது அதிமுக அரசுதான். வழக்கு முடியும் நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, குற்றவாளிகளுக்கு திமுகவை சேர்ந்தவர் ஜாமின் எடுத்தார். இந்த வழக்கில் உண்மைத்தன்மை வெளிவர வேண்டும் என்றால் சிபிஐ விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
அதிமுகவுக்கு துரோகம் செய்த சிலரை தவிர மற்றவர்கள் மீண்டும் கட்சிக்கு வந்தால் சேர்ப்போம். திமுகவின் பி அணியாக ஓ. பன்னீர்செல்வம் செயல்பட்டு வருகிறார்.