

அதிமுகவில் இதுவரை 2 கோடியே 44 ஆயிரத்து 400 பேர் உறுப்பினர்களாக சேர விண்ணப்பித்துள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், அதிமுகவில் உறுப்பினர்களாக உள்ளவர்கள தங்களுடைய பதிவைப் புதுப்பித்துக்கொள்வதற்கும், புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்கான விண்ணப்பப் படிவங்கள் தலைமைக் கழகத்தில், 5.4.2023 முதல் விநியோகிக்கப்பட்டு, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்கள் 4.5.2023 முதல் பெறப்பட்டு வருகின்றன.
அதிமுகவில் 2 கோடி உறுப்பினர்களை சேர்த்திட வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்து செயல்பட்டு வந்த நிலையில், தற்போது வரையில் 2 கோடியே 44 ஆயிரத்து 400 பேர் உறுப்பினர்களாக சேருவதற்கு விண்ணப்பித்துள்ளனர்.
“கட்சி வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு” வருகின்ற 20.8.2023 அன்று மதுரையில் நடைபெற உள்ள நிலையில், இந்த மாநாட்டில், கட்சி நிர்வாகிகளும், கட்சித் தொண்டர்களும், பொதுமக்களும் பெருந்திரளான அளவில் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டும் என்பதற்காக, மாவட்டக் கழகங்களின் சார்பில் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றதால், கட்சியில் உறுப்பினர்களாக சேருவதற்கும், உறுப்பினர் பதிவை புதுப்பிப்பதற்குமான காலக்கெடுவை நீட்டித்துத் தருமாறு, 4.8.2023 அன்று தலைமைக் கழகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின்போது, மாநாட்டுக்குக் குழு உறுப்பினர்களும். மாவட்டக் கழகச் செயலாளர்களும் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, 17.8.2023 மாலை 5 மணி வரி நீட்டிக்கப்படுகிறது. இதுவே இறுதியான வாய்ப்பாகும்.
புதிய உறுப்பினர் உரிமைச் சீட்டுகளைப் பெற்றுள்ள கழக உடன்பிறப்புகள் மட்டுமே, கழகப் பொறுப்புகளில் நியமனம் செய்யப்பட்டு பணியாற்றுவதற்கும், கட்சி அமைப்புத் தேர்தல்களில் போட்டியிடுவதற்கும், வாக்களிப்பதற்கும் தகுதி உடையவர்கள் ஆவார்கள் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.