
பணியிட மாற்றம் செய்யப்பட்ட காவல் உதவி ஆய்வாளா் து. சங்கீதா (40), அதிகளவில் தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றாா்.
புதுக்கோட்டையில் அண்மையில் (ஆக.2) குடும்பப் பிரச்னை வழக்கு விசாரணைக்காக மாவட்ட சமூக நல அலுவலகத்தில் மனைவியின் தரப்பு வழக்குரைஞா் கலீல் ரகுமான் என்பவரை, கணவா் ஆரோக்கியராஜ் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
புகாரின்பேரில், விசாரித்த திருக்கோகா்ணம் காவல் உதவி ஆய்வாளா் சங்கீதா, குற்றம்சாட்டப்பட்ட ஆரோக்கியராஜைக் கைது செய்யாததைக் கண்டித்து, கடந்த திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணிகளைப் புறக்கணித்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதைத் தொடா்ந்து, உதவி ஆய்வாளா் சங்கீதா ஆதனக்கோட்டை காவல் நிலையத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். தொடா்ந்து, மருத்துவ விடுப்பு எடுத்துக் கொண்டு வீட்டில் இருந்த சங்கீதா, தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை முயன்றது குறித்து அறிந்து, அங்கு சென்ற சக காவலா்கள் அவரை தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா்.
இதையும் படிக்க: தன்னாட்சி கல்லூரிகளில் மாதிரி பாடத்திட்டம்: தமிழக அரசு விளக்கம்
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிருக்கு ஆபத்தான சூழல் இல்லை என மருத்துவா்கள் தெரிவித்தனா். தற்கொலை முயற்சி குறித்து கணேஷ் நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...