சென்னை: தீயும் மண்ணும் தின்னும் உடலைப் பிறர்க்களித்து அவர்களுக்கு வாழ்வளிக்க முன்வருவோம்! அனைவரும் உடலுறுப்பு தானம் செய்வோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
புதுதில்லியில் நடைபெற்ற 13 ஆவது இந்திய உறுப்பு தான தின விழாவில், சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி முன்னிலையில், சிறந்த மாநில உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு விருதை தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வழங்கினார்.
உடல் உறுப்பு தானத்தில் சிறந்து விளங்கும் மாநில விருதை தமிழகம் பெற்று, மத்திய சுகாதார அமைச்சக தரவரிசையில் மாநிலம் மீண்டும் முதல் இடத்தைப் பிடித்தது.
2008 ஆம் ஆண்டு உறுப்பு தானம் திட்டம் தொடங்கியதில் இருந்து, 1,706 நன்கொடையாளர்களிடம் இருந்து 6,249 முக்கிய உறுப்புகளை அரசு மீட்டெடுத்துள்ளது.
இந்த நிலையில், உடலுறுப்பு தானம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர்(எக்ஸ்) பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், உடலுறுப்பு தானம் என்பது தமிழ்நாட்டில் ஓர் இயக்கமாவே செயல்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே மிகப் பரந்த மனதுடைய மக்களும், மிகச் சிறந்த மருத்துவக் கட்டமைப்பும் இங்கு இருப்பதால்தான் உறுப்புகளை தானம் செய்வதில் இந்தியாவிலேயே முதலிடம் பெற்றுள்ளோம்.
தீயும் மண்ணும் தின்னும் உடலைப் பிறர்க்களித்து அவர்களுக்கு வாழ்வளிக்க முன்வருவோம்! அனைவரும் உடலுறுப்பு தானம் செய்வோம்! என முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.