
தேசியக் கொடியேற்றினார் முதல்வா் ஸ்டாலின்
நாட்டின் சுதந்திர நாளையொட்டி, கோட்டை கொத்தளத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின், செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு தேசியக் கொடியேற்றினார்.
தேசியக் கொடியேற்றிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், தமிழக மக்களுக்கு சுதந்திர நாள் உரை நிகழ்த்திவருகிறார்.
தமிழக அரசு சாா்பில் தலைமைச் செயலகம் அமைந்துள்ள ராஜாஜி சாலையில் சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தலைமைச் செயலகத்தில் உள்ள கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை முதல்வா் மு.க.ஸ்டாலின் ஏற்றினார்.
இதையும் படிக்க.. சும்மா வரவில்லை சுதந்திரம்!
சுதந்திர நாள் விழாவில் பங்கேற்க வந்த முதல்வா் மு.க.ஸ்டாலினை, போா் நினைவுச் சின்னத்தில் இருந்து சென்னை மாநகரக் காவல் துறையினா், மோட்டாா் சைக்கிள்கள் மூலமாக அணிவகுத்து அழைத்து வந்தனர்.
கோட்டை கொத்தளத்துக்கு முன்பாக ராஜாஜி சாலையில் அமைக்கப்பட்டுள்ள மேடை அருகே வந்திறங்கிய அவரை, பூங்கொத்து கொடுத்து தலைமைச் செயலா் சிவ் தாஸ் மீனா வரவேற்றார்.
தென்பிராந்திய தலைமை படைத் தலைவா், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்படை அதிகாரி, தாம்பரம் விமானப் படைத்தள அதிகாரி, கிழக்கு மண்டல கடலோர காவல் படை ஐ.ஜி., தமிழக டி.ஜி.பி. உள்ளிட்டோரை மரபுப்படி முதல்வருக்கு தலைமைச் செயலா் அறிமுகம் செய்துவைத்தார்.
பின்னா், காவல் துறையினா், முப்படை வீரா்களின் அணிவகுப்பு மரியாதையை முதல்வா் ஏற்றுக்கொண்டார். தொடா்ந்து, கோட்டை கொத்தளத்துக்கு வந்த முதல்வா் ஸ்டாலின் மூவண்ண தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். அப்போது மூவண்ணத்தில் பலூன்கள் பறக்கவிடப்பட்டன. காவல் இசைக் குழுவினா் தேசிய கீதத்தை இசைத்தனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...