திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த திருமலையான்பட்டியில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் கடந்த சில நாள்களுக்கு முன் இடைத்தேர்வு நடைபெற்றுள்ளது. தேர்வில் அறிவியல் - கணிணியுடன் கூடிய பிரிவு +1 மாணவ-மாணவியர்கள் 27 பேர் தேர்வு எழுதியுள்ளனர். 50 மதிப்பெண்ணிற்கான தேர்வில் ஒரு மாணவியை தவிர, வகுப்பில் இருந்த 26 பேரும் குறைந்த அளவிலான மதிப்பெண்ணே எடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த வேதியியல் ஆசிரியர் அனைவருக்கும் கேள்வித்தாளை வீட்டு பாடமாக பயின்று வர கூறினாராம். ஆனால் அதற்கும் பெரும்பாலான மாணவ-மாணவியர்கள் படித்து வரவில்லையாம். வெள்ளிக்கிழமை காலை வகுப்பிற்கு வந்த ஆசிரியர், அங்கிருந்த 22 மாணவ- மாணவியர்களை பிரம்பு கொண்டு தொடை, முதுகு, கை, கால் பகுதிகளில் அடித்துள்ளார். இதில் மாணவர்கள், மாணவியர்களின் உடலில் ரத்த காயம் ஏற்படும் அளவிற்கு கொடுங்காயம் ஏற்பட்டுள்ளது.