
நான்குனேரியில் நடந்த சம்பவம் திடீரென நடைபெற்றது அல்ல, திட்டமிட்டே நடத்தப்பட்டது என்று விசிக கண்டன ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பேசினார்.
நெல்லை மாவட்டம் நான்குனேரியில் மாணவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்தும் தென் மாவட்டங்களில் நடைபெறும் தொடர் சாதி ரீதியான பிரச்னைகளைக் கண்டித்தும் வண்ணாரப்பேட்டையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
கூட்டத்தில் தொல். திருமாவளவன் பேசியதாவது:
சாதிய வன்கொடுமைகளைக் கண்டித்து விசிக தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறது. நான்குனேரி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 2 மாணவர்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஏதும் அரியாத பிஞ்சு உள்ளம் கொண்ட குழந்தை தன்னைக் கொலை செய்ய முயன்ற நபர்களைக்கூட மரியாதையுடன் அண்ணன் என்று அழைக்கிறது. நான்குனேரி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் ஒவ்வொரு நாளும் சாதிய பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பள்ளியில் நடந்த பிரச்னையை மறைத்துக்கொண்டு மன அழுத்தத்துடன் வீட்டில் இருந்தும்கூட, சமூகத்தில் இதனால் எதும் பிரச்சனை எழுந்துவிடும் என்ற எண்ணத்தில் மாணவர் வெளியே சொல்லவில்லை.
மாணவர்கள் மீது புகார் கொடுத்த சம்பவத்தை அறிந்து அதனைத் தடுக்காமல் பாதிப்பை ஏற்படுத்திய மாணவர்களின் தாயார் மற்றும் பாட்டி இந்த தாக்குதலுக்கு உதவி செய்துள்ளனர்.
நான்குனேரியில் நடந்த சம்பவம் திடீரென நடைபெற்றது அல்ல, திட்டமிட்டே நடத்தப்பட்டது.
ஆதிதிராவிடர் குடியிருப்புக்குள் புகுந்து சமூக விரோத சம்பவங்களை செய்துவிட்டு எளிதில் வெளியில் செல்ல முடியும் என்ற நிலை 20-ம் நூற்றாண்டிலும் நடக்கிறது. இந்த சமூகம் சாதி வெறியர்களுக்கு சாதகமான அமைப்பாக உள்ளது. சட்டம் காப்பாற்றும், அதிகாரிகள் காப்பாற்றுவர்கள் என்ற நம்பிக்கை சாதி வெறியர்களுக்கு உள்ளது.
இந்தியாவில் மதமாற்றம் நடைபெற சாதிய கோட்பாடுகள்தான் காரணம். சாதிய மதவாத அரசியலைப் பரப்பும் அமைப்புகளை அரசு என்ன செய்யப் போகிறது?
சாதிய மதவாத சக்திகள், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு எதிராக செயல்படுகிறது. அவர்கள் வேண்டுமென்றே திமுக கூட்டணியில் இருந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை திட்டமிட்டு வெளியேற்ற வேண்டும் என செயல்படுகிறார்கள் என்று பேசினார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...