அதிமுகவின் மாநாடு பிரமாண்டமான மாநாடு அல்ல: அண்ணாமலை
கோவை: மதுரையில் அதிமுக நடத்திய மாநாடு பிரமாண்டமான மாநாடு என்பது ஏற்கத்தக்க தல்ல என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் இன்று காலை அவர் கூறியதாவது:
“அரசியல் கட்சிகள் தங்கள் பலத்தை காட்டுவதற்காக பல்வேறு முயற்சிகளையும் மேற்கொள்வர். இதில் பிரமாண்டம் என எதுவும் கிடையாது. என் மண் என் மக்கள் நடை பயணத்திலும் ஆயிரக்கணக்கான மக்கள் திரள்கின்றனர். ஆனால் பிரமாண்டம் என்ற வார்த்தையை நான் பயன்படுத்த மாட்டேன். வயதான ஈவிகேஎஸ் இளங்கோவனும். நடக்க முடியாத அமைச்சர் பொன்முடியும் எனது நடைபயணம் சாதி வெறியை தூண்டுவதாக கூறுவது அவர்களது இயலாமையை காட்டுகிறது.
நீட் தேர்வு விவகாரத்தில் ஆளுநர் தனது கடமையை சரியாக செய்துள்ளார். இனிமேல் குடியரசுத் தலைவரிடம் தான் அவர்கள் முறையிட வேண்டும். காவிரி விவகாரம் இந்த அளவுக்கு தீவிரமடைந்ததற்கு தமிழக அரசே காரணம். இரு மாநில மக்களின் உணர்வை தூண்டிவிட்டுள்ளனர். எந்த அசம்பாவிதமும் ஏற்பட்டு விடக்கூடாது.
இதையும் படிக்க | வாக்னர் படைத் தலைவர் கொலையா? புதினுக்கு மிரட்டல்!
சந்திரயான்-3ன் வெற்றி இந்தியாவின் வெற்றி. இது தமிழர்களுக்கான வெற்றி என சுருக்கக் கூடாது. அவர்கள் தேசிய தமிழர்கள். மேகதாது அணை விவகாரத்தில் தமிழக மக்களின் உணர்வுகளுக்கு பாஜக துணையாக இருக்கும். அடுத்த ஆண்டு ஜனவரி 11-இல் என் மண் நடைபயணம் 234 தொகுதிகளிலும் முடிவடையும் போது ஒரு புதிய அரசியல் புரட்சியே உருவாகி இருக்கும்” என்றார் அண்ணாமலை.