
திருப்பூர்: திருப்பூர் வீரபாண்டி பகுதியில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பின்னலாடைகள், இயந்திரங்கள் எரிந்து நாசமடைந்தன.
திருப்பூர் வீரபாண்டியை அடுத்த பலவஞ்சிபாளையம் அருகில் தனியாருக்குச் சொந்தமான பின்னலாடை ஏற்றுமதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் இன்று விடுமுறை என்பதால் தொழிலாளர்கள் யாரும் பணிக்குவரவில்லை என்று தெரிகிறது. இதனிடையே, பின்னலாடை நிறுவனத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை மாலை சுமார் 5.30 மணி அளவில் பல அடி தொலைவுக்கு கரும்புகை எழுந்துள்ளது.
இதுகுறித்து அந்த வழியாகச் சென்றவர்கள் திருப்பூர் தெற்கு தீயணைப்பு நிலையத்துக்கும், வீரபாண்டி காவல் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். இதன் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் 20க்கும் மேற்பட்டோர் இரவு 7.30 மணி வரையிலும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த தீ விபத்தில் ஏற்றுமதிக்காக வைக்கப்பட்டிருந்த பல லட்சம் மதிப்பிலான பின்னலாடைகள், இயந்திரங்கள் எரிந்து நாசமடைந்ததாகத் தெரிகிறது.
ஏனினும் தீயை முழுமையாக அணைத்தால் மட்டுமே தீ விபத்துக்கான காரணம் தெரியவரும் என்று தீயணைப்புத்துறையினர் தெரிவித்தனர்.
இந்த விபத்து குறித்து வீரபாண்டி காவல் துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...