வங்கக் கடல் பகுதியில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.
தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியிருந்த நிலையில் மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து இன்று(வெள்ளிக்கிழமை) காலை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.
தொடா்ந்து இது மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து டிச. 3-இல் ‘மிக்ஜம்’ புயலாக மாறும். டிச. 4-ஆம் தேதி வடமேற்கு திசையில் நகா்ந்து வட தமிழகம், தெற்கு ஆந்திர பகுதியில் கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. அதாவது சென்னை - மசூலிப்பட்டினம் இடையே டிச. 4 ஆம் தேதி கரையைக் கடக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதனால் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் குறிப்பாக சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.