புதுச்சேரி: மிக்ஜம் புயல் எதிரொலியாக, புதுச்சேரியில் 5 ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு திங்கள்கிழமை ஏற்றப்பட்டது.
மிக்ஜம் புயல் எதிரொலியாக புதுச்சேரியில் கடந்த 3 நாட்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. திங்கள்கிழமை காலை வரையில் 34 மில்லி மீட்டா் மழை பதிவாகியிருந்தது. புதுச்சேரி கடற்கரையில் அலைகளின் சீற்றம் ஞாயிற்றுக்கிழமை அதிகமாக இருந்தது. இதையடுத்து இரவு முதல் அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் நடமாட்டம் தடை செய்யப்பட்டது. செவ்வாய்க்கிழமை (டிச.5) வரையில் கடற்கரையில் மக்கள் நடமாட்டத்துக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், துறைமுகத்தின் அருகில் அபாயகரமான வானிலை நிலவுவதை எச்சரிக்கும் வகையிலும்,புயல் துறைமுகப் பகுதியின் இடதுபக்கக் கரை பகுதியைக் கடப்பதை குறிக்கும் வகையிலும் திங்கள்கிழமை 5 ஆம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டது. கடற்கரைப் பகுதியில் மக்கள் நடமாடாத வகையில் போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.