குட்கா முறைகேடு வழக்கில் குற்றப்பத்திரிக்கையில் உள்ள பிழைகளை திருத்த கூடுதல் அவகாசம் வழங்கியது சிபிஐ நீதிமன்றம்.
இதுதொடர்பான வழக்கு சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது குட்கா முறைகேடு வழக்கின் கூடுதல் குற்றப்பத்திரிக்கையில் உள்ள பிழைகளை திருத்தும்பணி முடிவடையவில்லை என சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. உடனே சிபிஐயின் கோரிக்கையை ஏற்று வழக்கு விசாரணையை பிப்ரவரி 17ஆம் தேதிக்கு சென்னை சிபிஐ நீதிமன்றம் ஒத்தி வைத்தது.
கடந்த 2016- ஆம் ஆண்டு செங்குன்றம் அருகே அமைந்திருந்த கிடங்கு ஒன்றில் வருமான வரித்துறையினா் நடத்திய சோதனையில் ரகசிய டைரி ஒன்று சிக்கியது. அதில், தமிழகத்தில் குட்கா விற்பனைக்கு இருந்த தடையை மீறி குட்கா விற்பனை செய்ய அமைச்சா்கள் மற்றும் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டது தெரியவந்தது.
இதைத் தொடா்ந்து முன்னாள் அமைச்சா் சி.விஜயபாஸ்கா், ரமணா, முன்னாள் டிஜிபிக்கள் டி.கே ராஜேந்திரன், ஜாா்ஜ், எஸ்.பி விமலா, கலால்துறை , உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.