காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் திருமகன் ஈவெரா மாரடைப்பால் மரணமடைந்தார்.
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகனுமான திருமகன் ஈவெரா(46) இன்று மாரடைப்பால் காலமானார்.
இதையும் படிக்க.. 40 காயங்கள்.. அஞ்சலியின் உடல் கூறாய்வு முடிவு வெளியானது
திருமகன் ஈவெரா உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு, ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சற்றுமுன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2021ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் ஈரோடு கிழக்குத் தொகுதியில் முதல் முறையாக களமிறங்கிய திருமகன் ஈவெரா, அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சட்டப்பேரவை உறுப்பினரானார்.
தொகுதிப் பணிகளிலும், சட்டப்பேரவை நிகழ்வுகளிலும் ஆர்வத்துடன் பங்கேற்று வந்த திருமகன், இன்று மாரடைப்பால் மரணமடைந்தார். திருமகனுக்கு மனைவியும் ஒரு மகளும் உள்ளனர்.
ஈவிகேஎஸ் இளங்கோவன் - வரலட்சுமி தம்பதியின் இரண்டாவது மகன் திருமகன். பொருளாதாரத்தில் பட்டம் பெற்றவர். தமிழகக் காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடகம் மற்றும் தொழில்நுட்பப் பிரிவின் தலைவராகவும் பொறுப்பு வகித்தவர்.
ஈவிகேஎஸ் இளங்கோவனின் பேத்தியும், சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா மகளுமான சமணா கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற 2022 குதிரையற்றப் போட்டியில் இந்திய அளவில் முதலிடம் பிடித்து ஜூனியர் சாம்பியன் கோப்பையை வென்றதையொட்டி முதலமைச்சர் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். அப்போது, மகளுடன் திருமகன் ஈவெராவும் முதல்வரை சந்தித்திருந்தார்.