40 காயங்கள்.. அஞ்சலியின் உடல் கூறாய்வு முடிவு வெளியானது

தில்லியின் சுல்தான்புர் புறநகர்ப் பகுதியில், 12 கிலோ மீட்டர் தொலைவுக்கு காரில் இழுத்துச் செல்லப்பட்டு மரணமடைந்த 20 வயது அஞ்சலி சிங்கின் உடல் கூறாய்வு முடிவுகள் வெளியாகியிருக்கிறது.
40 காயங்கள்.. அஞ்சலியின் உடல் கூறாய்வு முடிவு வெளியானது
40 காயங்கள்.. அஞ்சலியின் உடல் கூறாய்வு முடிவு வெளியானது

தில்லியின் சுல்தான்புர் புறநகர்ப் பகுதியில், 12 கிலோ மீட்டர் தொலைவுக்கு காரில் இழுத்துச் செல்லப்பட்டு மரணமடைந்த 20 வயது அஞ்சலி சிங்கின் உடல் கூறாய்வு முடிவுகள் வெளியாகியிருக்கிறது.

தலைநகா் தில்லியில் 20 வயது பெண் அஞ்சலி சிங் சென்ற ஸ்கூட்டர் மீது காா் மோதி, அவரது உடல் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவத்தில் அதிர்ச்சி தரும் வகையில் அவரது உடல் கூறாய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.

காரில் 12 கிலோ மீட்டர் தொலைவுக்கு இழுத்துச் செல்லப்பட்டதால், அவரது மூளைப்பகுதியே காணாமல் போயிருந்ததாகவும், மண்டை ஓடு திறந்திருந்ததாகவும் உடல் கூறாய்வில் அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், உடலில் தொடை, கால், முதுகெலும்பு என 40 இடங்களில் காயங்கள் ஏற்பட்டு, தனித்தனியாக மற்றும் கூட்டாக காயங்கள் காரணமாக அஞ்சலி சிங் பலியானதாக உடல் கூறாய்வு தெரிவித்துள்ளது.

அவரது உடல் முழுக்க காயங்கள் இருந்ததாகவும், பல காயங்கள் மண் மற்றும் கற்களால் மூடப்பட்டிருந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பாலியல் பலாத்காரம் எதுவும் நடந்ததற்கான ஆதாரங்கள் இல்லை என்றும் உடல் கூறாய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


டிசம்பர் 31ஆம் தேதி நள்ளிரவு, தில்லியில் காரில் சிக்கி இளம்பெண் 12 கிலோ மீட்டர் தொலைவுக்கு இழுத்துச் செல்லப்பட்டதில் அவர் பலியானார்.

இந்த சம்பவத்தை விசாரித்த காவல்துறையினர், ஸ்கூட்டர் மீது கார் மோதிய போது, பலியான பெண்ணுடன் மற்றொரு பெண்ணும் பயணித்ததை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். சிசிடிவி காட்சிகள் மூலம் அதனைக் கண்டுபிடித்த காவல்துறையினர், செவ்வாயன்று, அவரது அடையாளங்களைக் கண்டுபிடித்து, அவரை விசாரணைக்கு அழைத்து வந்தனர். அவரிடம் சம்பவம் நடந்த போது என்ன நடந்தது என்பது குறித்த விவரங்கள் காவல்துறைக்கு பெரும் சாட்சியமாக மாறியிருக்கிறது.

அஞ்சலியின் தோழியாக அறியப்படும் நிதி காவல்துறையிடம் கூறுகையில், நாங்கள் இருவரும் வந்த ஸ்கூட்டரை கார் இடித்த போது, தான் சாலையின் ஒருபக்கம் விழுந்துவிட்டேன், தோழி மறுபக்கம் விழுந்துவிட்டார். அவர் மீது கார் ஏறியபோது, கார் சக்கரத்தில் அவர் மாட்டிக் கொண்டார். அதனை காரில் இருந்த அனைவருமே அறிந்திருந்தனர். ஆனாலும் அப்படியே காரை செலுத்தினர் என்று நிதி தெரிவித்துள்ளார்.

இதைப் பார்த்த எனக்கு அதிர்ச்சியாகிவிட்டது. அங்கிருந்து அப்படியே ஓடி வீட்டுக்கு வந்துவிட்டேன். யாரிடமும் நடந்த எதையும் சொல்லவில்லை. 

அஞ்சலி வண்டி ஓட்டும் நிலையில் இல்லை. நான் வண்டி ஓட்டுகிறேன் என்று சொல்லியும் கூட, என்னை நம்பாமல், தானே வண்டியை ஓட்டி வந்தார் என்றும் நிதி தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக முதலில் வெளியான தகவலில், பெண்ணின் உடல் 5 கிலோ மீட்டர் தொலைவுக்கு இழுத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால், கிட்டத்தட்ட 12 கி.மீ. தொலைவுக்கு பெண்ணின் உடல் இழுத்துச் செல்லப்பட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சுல்தான்புரியில் இருந்து குதுப்கா் பகுதியை நோக்கிச் சென்ற காா் ஒன்றில் பெண் ஒருவா் சிக்கி சாலையில் 12 கி.மீ. இழுத்துச் செல்லப்பட்டதில், அவா் உயிரிழந்தாா். அந்தப் பெண் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, அவரது இருசக்கர வாகனம் மீது காா் மோதியது. அப்போது, எதிா்பாராதவிதமாக அவரின் கால் காரின் சக்கரத்தில் சிக்கி, 12 கி.மீ. தொலைவுக்கு சாலையில் இழுத்துச் செல்லப்பட்டாா். இந்தச் சம்பவம் தொடா்பாக காரில் இருந்த 5 போ் கைது செய்யப்பட்டனா்.

விபத்து நடந்த போது, அந்த ஸ்கூட்டரில் மற்றொரு பெண்ணும் வந்துள்ளார். விபத்தில் சிக்கி லேசான காயமடைந்த அவர், காரில் இருந்தவர்களைப் பார்த்து அச்சமடைந்து அங்கிருந்து தப்பியோடியதாகவும், இது விபத்துதான் என்று அப்பெண் வாக்குமூலம் கொடுத்திருப்பதாகவும் காவல்துறையினர் நேற்று  தெரிவித்திருந்தனர்.

விபத்தில் சிக்கி உயிரிழந்த பெண்ணின் தந்தை கடந்த ஆண்டு உயிரிழந்த நிலையில், தனது ஒட்டுமொத்த குடும்பத்தையும் காப்பாற்றும் பொறுப்பை இவர் செய்து வந்ததாகவும், பகலில் வேலைக்குச் சென்று வந்த இவர், மாலையில் நிகழ்ச்சிகளை நடத்தும் நிறுவனத்தில் பகுதிநேர பணியாளராக பணியாற்றியதாகவும், அவ்வாறு ஒரு நிகழ்ச்சியில் வேலை செய்துவிட்டு தோழியுடன் வீடு திரும்பும்போதுதான் இந்த கோர விபத்தில் சிக்கியதாகவும் அவரது குடும்பத்தினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இறந்த பெண்ணின் உடலை பிரேதப் பரிசோதனை செய்ய மருத்துவ குழு அமைக்கப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா். பிரேதப் பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 5 போ் மீதும் புதிய குற்றச்சாட்டுகள் சோ்க்கப்படலாம் என்று சிறப்பு காவல் ஆணையா் (சட்டம் மற்றும் ஒழுங்கு) சாகா் ப்ரீத் ஹூடா தெரிவித்தாா்.

இதற்கிடையே, விபத்தில் இறந்த பெண் பாலியல் ரீதியாக பாதிப்புக்கு உள்ளாகவில்லை என்பது உடல் கூறாய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடா்பாக கைது செய்யப்பட்ட தீபக் கன்னா (26), அமித் கன்னா (25), க்ரிஷன் (27), மிதுன் (26), மனோஜ் மிட்டல் ஆகிய 5 பேரையும் 5 நாள்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி நீதிமன்றத்தில் போலீஸாா் மனு தாக்கல் செய்தனா். இந்த மனுவை திங்கள்கிழமை விசாரித்த பெருநகர மாஜிஸ்திரேட் அஜய் சிங் பரிஹா், குற்றம்சாட்டப்பட்ட 5 பேரையும் 3 நாள் போலீஸ் காவலுக்கு அனுப்ப உத்தரவிட்டாா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com