துணிவு கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர் பலி!
சென்னையில் துணிவு திரைப்படக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த நடிகர் அஜித் குமாரின் ரசிகர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் நடிகர் அஜித் குமாரின் துணிவு திரைப்படமும், நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படமும் இன்று அதிகாலை வெளியானது. துணிவு படத்தின் சிறப்புக் காட்சிகள் நள்ளிரவு 1 மணிக்கும், வாரிசு படத்தின் சிறப்புக் காட்சிகள் அதிகாலை 4 மணிக்கும் திரையிடப்பட்டதால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
கட்அவுட், பேனர்களுக்கு பால் ஊற்றக்கூடாது என்று தடை விதிக்கப்பட்ட போதிலும், வழக்கம் போல் கொண்டாட்டங்கள் நடைபெற்றன.
இந்நிலையில், சென்னை ரோகினி திரையரங்கில் அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த போது அந்த வழியாக வந்த லாரி மீது ஏறி நடனமாடியுள்ளனர்.
இதில், அஜித் ரசிகர் ஒருவர் கீழே விழுந்ததில் முதுகு தண்டில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மேலும், ரோகினி திரையரங்குகளில் உள்ள வாரிசு படத்தின் பேனர்கள் கிழிக்கப்பட்டதுடன், ரசிகர்கள் முந்திக் கொண்டு நுழைய முயன்றதால் திரையரங்கின் கண்ணாடி உடைந்ததால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.