கோவை: கோவை பூமார்கெட் பகுதியில் உள்ள அர்ச்சனா திரையரங்கில் அஜித் ரசிகர்கள் அத்துமீறி திரையரங்கிற்குள் நுழைய முயன்றதால் போலீசார் தடியடி நடத்தி கலைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பொங்கலை முன்னிட்டு நடிகர் அஜித் நடித்த துணிவு மற்றும் விஜய் நடித்த வாரிசு திரைப்படங்கள் புதன்கிழமை உலகம் முழுவதும் வெளியானது. இதில் நள்ளிரவு ஒரு மணி அளவில் துணிவு படம் வெளியானது.
இதனை கொண்டாடும் வகையில் அஜித் ரசிகர்கள் கோவையில் உள்ள அர்ச்சனா திரையரங்கம் முன்பு கூடி ஆரவாரம் செய்து கொண்டாடினர். அப்போது திடீரென ரசிகர்கள் சிலர் திரையரங்கிற்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிக்க | துணிவு கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர் பலி!
இதையடுத்து அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் தகராறில் ஈடுபட்ட ரசிகர்கள் மீது தடியடி நடத்தி கலைத்தனர். அப்போது ரசிகர்கள் சிலர் போலீசார் மீதும் பட்டாசு கொளுத்தி வீசியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதை அடுத்து திரையரங்கு வளாகத்திற்குள் இருந்த ரசிகர்கள் முற்றிலுமாக வளாகத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர்.
ஏற்கனவே, துணிவு மற்றும் வாரிசு படம் வெளியாவதை முன்னிட்டு இரண்டு ரசிகர்களுக்கும் போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தனர்.
இந்நிலையில், அஜித் ரசிகர்கள் அத்துமீறி திரையரங்குக்குள் நுழைந்து ரகலையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.