தமிழ்நாடு ஆளுநர் மாளிகையை முற்றுகையிடச் சென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை மத்திய அரசு திரும்பப்பெற வலியறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஜனவரி 13 ஆம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் ஏற்கெனவே அறிவித்திருந்தார்.
அதன்படி சென்னை கிண்டியில் தொல். திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ஜி. ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முத்தரசன், காங்கிரஸ் சார்பில் போபண்ணா ஆகியோரும் இதில் கலந்துகொண்டனர்.
இதையும் படிக்க | அண்ணாமலைக்கு 'இஸட்' பிரிவு பாதுகாப்பு?
இந்நிலையில், 3 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு தொல். திருமாவளவன் தலைமையிலான விசிகவினர் ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் நோக்கில் பேரணியாகச் சென்றனர்.
பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் தொல். திருமாவளவன் மற்றும் விசிகவினரை கைது செய்து அருகில் உள்ள மண்டபத்தில் வைத்துள்ளனர்.
முன்னதாக, தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் தொடக்க உரையில், தமிழ்நாடு, பெரியார், அம்பேத்கர், காமராஜர், அண்ணா, கருணாநிதி பெயர்களை உச்சரிக்க ஆளுநர் மறுத்துள்ளார். மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இதற்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றிய நிலையில், தேசிய கீதம் இசைப்பதற்கு முன்னதாகவே ஆளுநர், பேரவையைவிட்டு வெளியேறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆளுநரின் இந்த செயல்பாட்டுக்கு திமுக கூட்டணி கட்சிகள் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | ஆளுநர் உரை: தெலங்கானா வழி!