திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து தீவிர சோதனையில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
திருச்சி விமான நிலையத்தில் சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானங்கள் வந்துசெல்லும் நிலையில், பொங்கல் விடுமுறை காரணமாக வழக்கத்தைவிட கடந்த ஒரு வாரமாக கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
இந்நிலையில், இன்று பிற்பகல் 1.45 மணியளவில் விமான நிலைய அதிகாரியின் அறைக்கு வந்த தொலைபேசியில், விமான நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக கூறிய மர்ம நபர் தொலைபேசியை துண்டித்துவிட்டார்.
இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் இணைந்து தீவிர சோதனையில் ஈடுபட்ட நிலையில், வெடிகுண்டு மிரட்டல் புரளி எனத் தெரிவித்துள்ளனர்.
மேலும், விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
திருச்சி விமான நிலையத்தில் திடீரென வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டதால் பயணிகள் சிறிது பரபரப்பு அடைந்தனர்.