
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் ஈவேரா 67 ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக கூட்டணி தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் யுவராஜை விட 8000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று திருமகன் ஈவேரா சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் கடந்த நான்காம் தேதி மாரடைப்பால் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேரா காலமானார். இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு சட்டமன்றம் தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இன்று தேர்தல் ஆணையம் பல்வேறு மாநிலங்களுக்கு தேர்தல் அறிவித்தபோது ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கும் தேர்தல் தேதி அறிவித்தது.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு வரும் ஜனவரி 31 ஆம் தேதி வேட்பு மனு தாக்கலும், அடுத்த மாதம் பிப்ரவரி 27ஆம் தேதி வாக்கு பதிவும், மார்ச் 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 713 ஆண் வாக்காளர்களும், ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 140 பெண் வாக்காளர்களும், 23 மாற்று பாலினத்தவர்களும் என மொத்தமாக 2 லட்சத்து 26 ஆயிரத்து 876 வாக்காளர்கள் உள்ளனர். 238 வாக்குச்சாவடிகள் உள்ளது.
இந்தத் தேர்தலில் 500க்கும் மேற்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது.
இதனையும் படிக்க: கோயிலுக்குள் அனுமதி மறுப்பு: அமலா பால் வேதனை
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் தலைவர்களின் படம் மற்றும் பெயர்கள் மறைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.