சென்னை: எடப்பாடி பழனிசாமி அணியினர் சந்தித்த சிறிது நேரத்தில், பாஜக அலுவலகம் வந்த ஓ. பன்னீர்செல்வம், இடைத்தேர்தலில் ஆதரவு கோரியிருக்கிறார்.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பும், ஓ. பன்னீர்செல்வம் தரப்பும் பாஜக அலுவலகத்துக்கு அடுத்தடுத்துச் சென்றதால் பரபரப்புத் தொற்றிக் கொண்டது.
அதிமுக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிகும் பாஜக கட்சி அலுவலகத்துக்கு, அதிமுகவின் இரண்டு அணிகள் சார்பிலும் மூத்த தலைவர்கள் சென்று தங்கள் தரப்புக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று கோரியிருப்பதால், பாஜக இடைத்தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதா? அல்லது அதிமுக வேட்பாளர்களில் யாருக்கு ஆதரவு தருவது? என்ற குழப்பத்தில் உள்ளது.
இதற்கிடையே, இடைத்தேர்தலில் பாஜகவே போட்டியிட்டு பலத்தை நிரூபிக்க வேண்டும் என்று கட்சியின் ஒரு பிரிவினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில்தான், இடைத்தேர்தல் பணிக்காக 14 பேர் கொண்ட குழுவை தமிழக பாஜக தலைமை அறிவித்திருந்தது.
எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கமலாலயத்துக்கு வந்து சென்ற சிறிது நேரத்திலேயே, தமிழ்நாடு பாஜக தலைமை அலுவலகத்துக்கு ஓ. பன்னீர்செல்வம் வருகை தந்தார். அவருடன், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோரும் அண்ணாமலையை சந்தித்துப் பேசினர். ஓ. பன்னீர்செல்வம் தரப்பினரை பாஜகவினர் வரவேற்று பேசி வருகிறார்கள்.
முன்னதாக, அதிமுக கூட்டணி சார்பில் வேட்பாளரை நிறுத்திக் கொள்ள தமாகா ஆதரவு தெரிவித்துவிட்டது. தனித்துப் போட்டியுமில்லை, யாருக்கும் ஆதரவும் இல்லை என்று பாமகவும் அறிவித்துவிட்டது. இந்த நிலையில், பாஜகவின் ஆதரவை அதிமுகவின் இரண்டு அணிகளும் கோரியிருக்கின்றன.