சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெறும் என தமாகா தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் களம் விறுவிறுப்படைந்துள்ளது.
இந்த தேர்தலில் அதிமுக போட்டியிடும் என இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பு அறிவித்துள்ள நிலையில், அதிமுக சார்பில் தங்கள் அணியும் போட்டியிடும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் அறிவித்துள்ளது.
இரு தரப்பும் கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரியுள்ளனர்.
இந்நிலையில், ஈரோடு தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து திமுக சார்பில் அமைச்சர்கள் உள்பட 31 பேர் அடங்கிய தேர்தல் பணிக்குழு உறுப்பினர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அதிமுக சார்பில் போட்டியிட விருப்புவோர் இன்று முதல் வரும் 26 ஆம் தேதி வரை விருப்ப மனு அளிக்கலாம் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளருக்கு வெற்றிவாய்ப்பை ஏற்படுத்த தமாகா சார்பில் ஈரோடு மத்திய மாவட்ட தமாகா தலைவர் விஜயகுமார் தலைமையில் 16 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை அமைத்து அக்கட்சியின் தலைவர் ஜிகே.வாசன் உத்தரவிட்டுள்ளார்.
அந்த குழுவில் விடியல் சேகர், யுவராஜா, ஆறுமுகம், சந்திரசேகர் உள்ளிட்ட நிர்வாகிகள் இடம்பெற்றுள்ளனர்.
இதுகுறித்து ஜி.வே.வாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நல்லதே நடக்கும் என நம்புகிறேன். அதிமுக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெறும். அதிமுக வெற்றி பெறுவதற்கான வியூகத்தை அமைத்துள்ளோம். அது வெற்றி வியூகமாக மாறும் என்று வாசன் கூறினார்.