வட சென்னை பகுதிகளில் நவீன வசதிகளுடன் விளையாட்டு வளாகம் அமைக்கப்படும் என்று முதல்வர் சட்டப்பேரவையில் அறிவித்த நிலையில், ரூ.9.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
கைப்பந்து, பேட்மிண்டன், கூடைப்பந்து, கபடி, குத்துச்சண்டை, நவீன உடற்பயிற்சிக் கூடம் ஆகியவை அடங்கிய வளாகம் அமைக்கப்பட உள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு சட்டப் பேரவையில் விதி 110ன் கீழ், வடசென்னை பகுதியானது பல்வேறு விளையாட்டுத் திறமையாளர்களை ஊக்குவிப்பதில் புகழ் பெற்று விளங்கி வருகிறது எனவும், அப்பகுதியில் உள்ள இளைஞர்களை ஊக்கப்படுத்தி மேம்படுத்தக்கூடிய நோக்கில், வடசென்னை பகுதியில் நவீன தொழில் நுட்பங்களோடு கூடிய நவீன குத்துச்சண்டை விளையாட்டு வளாகம் ரூ.10 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
தமிழ்நாடு முதல்வர் அறிவிப்பினைத் தொடர்ந்து, தண்டையார்பேட்டை மண்டலம் (மண்டலம்-4), பகுதி-10,
வார்டு-41-க்குட்பட்ட சுண்ணாம்பு கால்வாய் பகுதியில் அமைந்துள்ள பெருநகர சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் விளையாட்டு வளாகம் அமைக்கப்பட உள்ளது.
அதில் ஆண்களுக்கான உடற்பயிற்சிக் கூடம், பெண்களுக்கான உள்ளரங்க உடற்பயிற்சிக் கூடம், ஓடுதளம், சறுக்கு விளையாட்டிற்கான தளம் (Skating Rink), குழந்தைகளுக்கான விளையாட்டுக் கூடம் மற்றும் விளையாட்டு கருவிகள், கூடைப்பந்து, கையுந்துப் பந்து, இறகுப்பந்து, வளையப்பந்து, கிரிக்கெட் வலைப்பயிற்சி, கபடி, குத்துச்சண்டை, சிலம்பாட்டம் போன்ற விளையாட்டுகளுக்கான வசதிகள் மேற்கொள்ளப்படவும்,
செயற்கை நீரூற்று, பார்வையாளர் மாடம், சாதாரண மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பறைகள், மின்வசதி, குடிதண்ணீர் வசதி, சூரிய ஒளி தகடுகள் பொருத்துதல் மற்றும் இதர வசதிகள் செய்யப்படவும் பெருநகர சென்னை மாநகராட்சியால் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு அரசிற்கு சமர்ப்பிக்கப்பட்டது.
தண்டையார்பேட்டை மண்டலம் (மண்டலம்-4), பகுதி-10,
வார்டு-41-க்குட்பட்ட சுண்ணாம்பு கால்வாய் பகுதியில் அமைந்துள்ள பெருநகர சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் ரூ.9.70 கோடி மதிப்பீட்டில் சிறந்த விளையாட்டு வசதிகள் மற்றும் கட்டமைப்புகளுடன் கூடிய ஒரு விளையாட்டு வளாகம் அமைக்க நிர்வாக அனுமதியும், இதற்கான செலவினம் ரூ.9.70 கோடியை மானியமாக வழங்கியும் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வரால் உத்தரவிடப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.